பல்லடத்தில் டாஸ்மாக் பாரை சூறையாடிய கும்பல்- ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் அரசு மதுபானக்கடை பார் உள்ளது.
- பாரில் வேலை செய்யும் அங்குசாமி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் அரசு மதுபானக்கடை பார் உள்ளது. இங்கு நேற்று இரவு வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மது அருந்த சென்றார். மது அருந்தும் போது பாரில் வாங்கிய சுண்டல் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை பாரில் வேலை செய்யும் அங்குசாமி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது பாண்டியராஜன், நான் வீரபாண்டியில் பெரிய ஆள், என்னிடமே நீ பணம் கேட்கிறாயா என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அங்குசாமி, பணம் கொடுத்து விட்டு தின்பண்டங்களை சாப்பிடுங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து பணத்தை கொடுத்து விட்டுச்சென்ற பாண்டியராஜன், இரவு சுமார் 8 மணி அளவில் அவரது நண்பர்கள் லட்சுமணன், சூர்யா ஆகியோரை அழைத்துக்கொண்டு மதுபான பாருக்கு சென்று அங்குசாமியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கடையில் இருந்த நாற்காலிகள், டேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் ஏற்பட்ட கைகலப்பில், அங்குசாமி தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அங்குசாமி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியராஜன், லட்சுமணன், சூர்யா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.