உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தப்பட்ட 61 வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-06-25 09:36 GMT   |   Update On 2022-06-25 09:36 GMT
  • ஏராளமான கட்டுமானப் பொருட்கள் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கவனிக்கப்படாமல் கிடக்கின்றன.
  • வாகனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டனர்.

சென்னை:

சென்னையில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முக்கியமான வீதிகளில் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதால், சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதோடு அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

அத்தகைய வாகனங்களை அகற்றுவதற்காக கடந்த 22-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அங்கீகரிக்கப்படாத இடங்களில்வாகன நிறுத்தத்தை தவிர்க்க சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல், ஏராளமான கட்டுமானப் பொருட்கள் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கவனிக்கப்படாமல் கிடக்கின்றன. 10 இடங்களில் கிடந்த கட்டுமான பொருட்களை அகற்றுமாறு உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. இதேபோல் 107 இடங்களில் கடை பலகைகள், நீட்டிக்கப்பட்ட கடைகள் போன்ற பிறதடைகளையும் அகற்றி வழக்குபதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கேட்பாரற்ற வாகனங்கள், கைவிடப்பட்ட வாகனங்கள் போலீசாரின் தனியார் இழுவை வாகனங்களை கொண்டு அகற்ற (பறிமுதல்) செய்யப்பட்டது. மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டனர்.எதிர்காலத்தில் சாலைப் பயனாளர்களுக்கு இடையூறாகவோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறாக வோநிறுத்த மாட்டோம் என்று உத்தரவாத கடிதங்கள் பெறப்பட்டன . இந்த சிறப்பு வாகன தணிக்கைகள் தொடரும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News