கடையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
- கடந்த சில மாதங்களாகவே விலங்கினங்களை மர்மநபர்கள் யாருக்கும் தெரியாமல் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது.
- வனப்பகுதியில் நேற்று சிலர் முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக கடையம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆம்பூரில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதியில் காட்டுமுயல், காடை, கவுதாரி போன்ற விலங்குகள் அதிகமாக சுற்றித்திரிந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே அந்த விலங்கினங்களை மர்மநபர்கள் யாருக்கும் தெரியாமல் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த வனப்பகுதியில் சிலர் முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக கடையம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடி கறி சமைத்து கொண்டிருந்த 5 பேரை சுற்றிவளைத்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் விசாரித்தபோது, கடையம் அருகே உள்ள காவூரை அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த ராஜீவ் காந்தி, முருகன், சூரியநாராயணன், பிரபாகரன், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.