உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீட்டில் நிர்வாண நிலையில் பெண் பிணம்- போலீசார் விசாரணை

Published On 2022-06-25 09:16 GMT   |   Update On 2022-06-25 09:16 GMT
  • கடந்த 20-ந் தேதி மாலை பணி முடித்து திரும்பிய ராதா அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் உடன் பேசிக்கொண்டு இருந்தார்.
  • பின்னர் வீட்டிற்குள் சென்ற ராதா அதன் பிறகு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ராதா குடியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்டது கோணசமுத்திரம் கிராமம். இங்குள்ள குப்பம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 45). ஈரோடு பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்தினரை பிரிந்து குப்பம்பட்டி காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

மேலும் அவர் ஈரோடு அருகிலுள்ள வெப்படை பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் அந்தத் தொழிற்சாலைக்கு சொந்தமான வாகனத்தில் பணிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை பணி முடித்து திரும்பிய ராதா அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் உடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்ற ராதா அதன் பிறகு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ராதா குடியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், ராதாவின் வீட்டினுள் நுழைந்து பார்த்தபோது அங்கு ராதா கட்டிலில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

மேலும் அவர் முகம் உள்ளிட்ட பகுதிகள் அழுகி இருந்ததால் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து ராதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எப்படி இறந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News