உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம்

முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2022-06-11 07:32 GMT   |   Update On 2022-06-11 07:32 GMT
  • 1,000 ரூபாய் முதியோர் உதவித் தொகை என்பது உண்பதற்கே போதாது என்ற நிலையில் தனியாக வீட்டு வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்வது என்பது மிகவும் சிரமம்.
  • எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை கைவிடவும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், பக்கம் 86, பத்தி 322-ல் முதியோர் நலன்' என்ற தலைப்பின்கீழ் 'தகுதியுள்ள முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும், முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கையினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, தற்போது ஓய்வூதியம் பெறும் முதியோரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்று இருந்தாலோ, மகன் அல்லது மகள் வீட்டில் வசித்தாலோ, சொந்த வீடு இருந்தாலோ முதியோர் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெறுகிறார் என்றால், வேறு வழியில்லாமல், அவசர செலவுக்காக தன்னிடம் உள்ள நான்கு அல்லது ஐந்து சவரன் நகையை வைத்துக்கடன் பெறுகிறார் என்றுதான் அர்த்தம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறார் என்றுதான் பொருள். அவரை எப்படி வசதி படைத்தவர் பட்டியலில் சேர்க்க முடியும்?

அதேபோன்று, மகன் அல்லது மகள் வீட்டில் வசிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் வயதான காலத்தில் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அங்கு கிடைக்கிறது. மேலும், 1,000 ரூபாய் முதியோர் உதவித் தொகை என்பது உண்பதற்கே போதாது என்ற நிலையில் தனியாக வீட்டு வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்வது என்பது மிகவும் சிரமம். எனவே, இவர்களும் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்பவர்கள்தான். சில இடங்களில், முதியோர் ஓய்வூதியம் வருகிறதே என்பதற்காக பெற்றோர்களை வீட்டில் வைத்திருக்கும் மகன்களும், மகள்களும் உண்டு. இதை நிறுத்திவிட்டால், முதியோர்கள் நடுத் தெருவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

சொந்த வீடு வைத்திருப்பவர்களைப் பொறுத்த வரையில், அந்த வீடு பூர்வீக வீடாகவோ அல்லது குடிசை வீடாகவோ அல்லது ஓட்டு வீடாகவோ கூட இருக்கலாம். வயதான காலத்தில், எந்த வித வருமானமும் இன்றி வீட்டை மட்டும் வைத்து வாழ்க்கை நடத்திட முடியாது. சாப்பிடுவதற்கு அவர்களுக்கு வருமானம் தேவை. எனவே, இவர்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வருபவர்கள் தான்.

இந்த 'யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், தற்போது முதியோர் ஓய்வூதியம் பெறுவோரை ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீக்குவது நியாயமற்ற செயல். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க.வின் இந்தச் - செயல் 'அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. தேர்தல் சமயத்தில் இனிய வார்த்தைகளில் அதைத்தருகிறேன், இதைத் தருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு நஞ்சைக் கக்குவது ஏற்புடையதல்ல. இருப்பதைப் பறிப்பது என்பது மக்கள் விரோதச் செயல்.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்பதற்காக பல நிபந்தனைகளின் மூலம் ஏழை, எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை கைவிடவும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News