உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதா?- உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-09-13 11:13 GMT   |   Update On 2022-09-13 11:13 GMT
  • குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, 3 மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

மதுரை:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொட்டுலுபட்டியை சேர்ந்த தனபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, 3 மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கொலை வழக்கு பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம், வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள் தங்களது உத்தரவில், இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தமிழக உள்துறை செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News