உள்ளூர் செய்திகள்

செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி மாணவிக்கு 3 மாதமாக பாலியல் தொல்லை- கல்லூரி முதல்வர் மீது வழக்கு

Published On 2022-12-02 09:30 GMT   |   Update On 2022-12-02 09:30 GMT
  • தனது அறைக்கு நேரில் வரவழைத்தும் மாணவிக்கு முதல்வர் ஜான் ஆபிரகாம் அறுவறுக்கத்தக்க வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
  • மாணவி பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் ஜான் ஆபிரகாமோ பாலியல் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை.

சென்னை:

சென்னை நந்தனத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து தங்கி இருந்தும் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கல்லூரியில் இருப்பதால் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் இங்கு சேர்ந்து படித்து வருகிறார்கள்.

இந்த கல்லூரியில் முதல்வராக இருப்பவர் ஜான் ஆபிரகாம். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஜான் ஆபிரகாம், செல்போனில் ஆபாசமாக பேசியும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது அறைக்கு நேரில் வரவழைத்தும் மாணவிக்கு முதல்வர் ஜான் ஆபிரகாம் அறுவறுக்கத்தக்க வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை மாணவி பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் ஜான் ஆபிரகாமோ பாலியல் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து மாணவி சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார், மாணவியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஜான் ஆபிரகாம் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது.

இதையடுத்து ஜான் ஆபிரகாம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். பாலியல் குற்றச்சாட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாமை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் முதல்வர் மீது பாலியல் புகார் தொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கல்லூரியில் படித்து வரும் சக மாணவிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News