உள்ளூர் செய்திகள்

வாகனங்களில் சென்றவர்களை தாக்கி மோட்டார் சைக்கிள்-செல்போன் பறித்த கும்பல்

Published On 2022-07-21 10:48 GMT   |   Update On 2022-07-21 10:48 GMT
  • சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அப்போது போலீசாரை பார்த்ததும் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சிப்காட் அருகே உள்ள தெற்கு சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மதுரை ரோட்டில் சொந்தமாக லாரிகள் வைத்துள்ளார்.

இவரது மகன் உத்தண்டு முருகன் (வயது22). இவர் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அவர் ஜோதிநகர் விலக்கு அருகே சென்ற போது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரை திடீரென வழிமறித்தனர்.

பின்னர் கத்தியை காட்டி அவரை மிரட்டிய கும்பல் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினர்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த ஊழியர் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆவேசமடைந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடி-நெல்லைசாலையில் சென்ற கும்பல் புதுக்கோட்டை பஜாரில் சென்ற ஒரு லாரியை மறித்து டிரைவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக சிப்காட், புதுக்கோட்டை, தட்டப்பாறை போலீசில் நிலையத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றனர்.

உடனடியாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். பிடிபட்டவர்கள் தூத்துக்குடி பிரைண்ட்நகர் 4-வது தெருவை சேர்ந்த சதீஷ் என்ற மோசஸ் (21), தூத்துக்குடி கட்டபொம்மன்நகர் குருவிரோட்டை சேர்ந்த கருப்பசாமி (19) என்பது தெரியவந்தது.

2 பேரையும் கைது செய்த போலீசார், தப்பிச் சென்ற 2 பேர் யார்? ஒரேநாள் நள்ளிரவில் பல்வேறு நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதால் இவர்கள் இது போன்று வேறுஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News