உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் வேலை தேடி வந்த வடமாநில தொழிலாளர்களை அறையில் அடைத்து சித்ரவதை செய்த கும்பல் கைது

Published On 2022-12-20 07:13 GMT   |   Update On 2022-12-20 07:13 GMT
  • திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்ய ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினமும் திருப்பூர் வந்த வண்ணம் உள்ளனர்.
  • வடமாநில வாலிபர்களிடம் நாங்கள் சொல்லும் கம்பெனியில் தான் வேலைப்பார்க்க வேண்டும்.

ஊத்துக்குளி:

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்ய ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினமும் திருப்பூர் வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 வாலிபர்கள் ரெயில் மூலம் திருப்பூர் வந்தனர்.

பின்னர் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து, எங்களுக்கு தெரிந்த பனியன் கம்பெனியில் வேலை உள்ளது .கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்று கூறினர்.

இதற்கு வடமாநில வாலிபர்கள் 8 பேரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 8 பேரையும் காரில் அழைத்து சென்ற 3பேர் கும்பல், முதலிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

மேலும் வடமாநில வாலிபர்களிடம் நாங்கள் சொல்லும் கம்பெனியில் தான் வேலைப்பார்க்க வேண்டும். உங்கள் சம்பளத்தை நாங்கள் வாங்கிகொள்வோம். சாப்பாடு மட்டுமே கிடைக்கும் என்று கூறியதுடன் 8பேரையும் உருட்டுக்கட்டையால் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

அப்போது 8 பேரில் ராஜ்மவுலி என்ற வாலிபர் மட்டும் அங்கிருந்து தப்பி ஊத்துக்குளி போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். நடந்தவற்றை கூறவே, போலீசார் முதலிபாளையத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் முதலிப்பாளைத்தில் உள்ள வீட்டில் அடைக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் வாலிபர்கள் 7பேரையும் போலீசார் மீட்டனர்.மேலும் அவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்தது திருப்பூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்த சிவகுமார்( 28) கர்நாடகாவை சேர்ந்த வெங்கடேஷ் (26), கிருஷ்ணகிரியை சேர்ந்த நிசாத்( 21) என தெரியவந்தது. இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் 3பேரையும் சிறையில் அடைத்தனர்.அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News