உள்ளூர் செய்திகள்

கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2022-10-18 05:22 GMT   |   Update On 2022-10-18 05:22 GMT
  • ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.
  • பெரியகுளம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த வனராஜா என்பது தெரிய வந்தது.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபார்க் சந்திப்பில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

சம்பவத்தன்று அதிகாலை இந்த மையத்துக்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கி வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். பின்னர் அவர் தன்னுடைய உருவம் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகாமல் இருக்க கண்காணிப்பு கேமிரா வயரை அறுத்தார்.

உடனடியாக இந்த தகவல் மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது. மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள அலாரம் ஒலித்தது. தகவல் சென்றதும் மும்பையில் உள்ள அதிகாரிகள் ஏ.டி.எம். மையம் உள்ள ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த வனராஜா (வயது 33) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Similar News