ரெயில்வேயில் ஓ.பி.சி.க்கு பதவி உயர்வு கோரி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தமிழகம் முழுவதும் 9 இடங்களில் ரெயில்வே அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சென்னையில் ரெயில்வே பொது மேலாளர் (டி.ஆர்.எம்) அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்சல், என்.சி.ஓ.பி.சி. பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரம்பூர்:
தெற்கு ரெயில்வே அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டாக்டர் ஆர். அப்சல் தலைமையில் தமிழகம் முழுவதும் 9 இடங்களில் ரெயில்வே அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ரெயில்வே பொது மேலாளர் (டி.ஆர்.எம்) அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்சல், என்.சி.ஓ.பி.சி. பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். ரெயில்வே தொழிலாளர்களுக்கு ஓபிசி சான்றிதழ்களை வழங்க வேண்டும். அவர்களது சேவை பதிவு புத்தகத்தில் ஓ. பி. சி. என குறிப்பிட வேண்டும். ஓ.பி.சி.க்கு வரவேண்டிய பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
ஓ. பி. சி. ரோஸ்டர் முறையை உடனே அமுல்படுத்தி வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னையில் கோட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையிலும், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் நுழைவாயிலில் பி. திருகுமரன் தலைமையிலும், கூடுதல் கோட்டம் ஆர். ஏழுமலை, ஹென்ட்ரி ஜான் ஆகியோர் தலைமையிலும், பெரம்பூர் லோகோ பணிமனையில் வின் அரசு, மதுரையில் செல்வகுமார் , பாலக்காட்டில் ஹரிதாஸ், சேலத்தில் சௌந்தர பாண்டியன், போத்தனூரில் லட்சுமி நாராயணன், பொன்மலையில் கோபி, திருவனந்தபுரத்தில் பேராட்சி செல்வன், திருச்சியில் பாலசுப்பிரமணியம், அரக்கோணத்தில் குப்பன், ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்ட ஆலோசகர் பாரதிதாசன் தலைவர் முகமது சுல்தான், பொருளாளர் ஆர்.செந்தில்குமார், ஜெய்சங்கர் பழனி வினோத் ஜவகர், சீனிவாச ராவ், மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.