மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
- பவானி ஆற்றுக்கு நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் காட்டு யானை.
- ஊட்டி ரோட்டின் அருகே அமைந்துள்ள கோவிலுக்குள் நள்ளிரவில் காட்டு யானை புகுந்தது.
சிறுமுகை:
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் பழைமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பவானி ஆற்றுக்கு நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் காட்டு யானை ஒன்று பவானி ஆற்றை கடந்து சந்தடி மிகுந்த சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்திற்குள் நுழைந்தது.
வெகு நேரத்திற்கும் மேலாக கோவில் வளாகத்திலேயே காட்டு யானை சுற்றி திரிந்தது. இந்த கோயிலை சுற்றி ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளது. யானை பிளிறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது காட்டு யானை ஒன்று நடமாடியபடி இருந்தது.
இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவர்கள் விரைந்து வந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த ஊட்டி ரோட்டின் அருகே அமைந்துள்ள கோவிலுக்குள் நள்ளிரவில் காட்டு யானை புகுந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.