உள்ளூர் செய்திகள்

ராமாபுரத்தில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்ட மூதாட்டி தீயில் கருகி பலி

Published On 2023-03-04 10:20 GMT   |   Update On 2023-03-04 10:20 GMT
  • உடல் கருகிய மூதாட்டியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராமாபுரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி மூதாட்டி சூர்ய குமாரி (வயது80). இவர் நேற்று மாலை வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தட்டில் இருந்த கற்பூரம் கை தவறி சூர்யகுமாரி சேலையில் விழுந்து திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி சூர்யகுமாரி உடல் முழுவதும் தீபற்றி எரிந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாலசுப்பிரமணியம் மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதில் உடல் கருகிய அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சூர்யகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி சூரியகுமாரியை காப்பாற்ற முயன்றதில் கணவர் பால சுப்பிரமணியம் லேசான தீக்காயம் அடைந்தார்.

இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News