கோபிசெட்டிபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
- கலைவாணியின் தந்தை சுரேஷ் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
- கலைவாணியின் வீட்டில் அருகில் உள்ள அவரது பெரியம்மா சித்ரா என்பவர் கலைவாணியை கூப்பிட்டு உள்ளார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மலர். இவர்களுக்கு அபிமன்யூ (16) என்ற மகனும், கலைவாணி (15) என்ற மகளும் உள்ளனர், கலைவாணி கோபியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு வந்தார்.
கலைவாணியின் தந்தை சுரேஷ் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார், இந்நிலையில் நேற்று கலைவாணியின் தாய் மலர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கலைவாணியும் அவரது சகோதரர் அபிமன்யூ மட்டும் இருந்து உள்ளனர். சிறிது நேரம் கழித்து அபிமன்யூ வெளியில் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கலைவாணியின் வீட்டில் அருகில் உள்ள அவரது பெரியம்மா சித்ரா என்பவர் கலைவாணியை கூப்பிட்டு உள்ளார். வீட்டில் கதவு திறந்து இருந்த நிலையில் யாரும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கலைவாணி துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்ரா, உறவினர்களுக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் கலைவாணியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கலைவாணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவி கலைவாணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.