சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
- சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- ஆசிரியர் அலமேலு நன்றி கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் கமால் பாட்சா நினைவாக மலேசியாதொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு (2021-2022) 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு 7-வது ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மலேசியா டி.எம்.ஒய்.கம்பெனி நிறுவனர் டத்தோ முகமது யூசுப் சார்பில் பள்ளி வளாகத்தில் தொழிலதிபர் பீர் முகம்மது தலைமையில் நடந்தது.
தினைக்குளம் ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது கான், செயலாளர் முகம்மது ரபீக், தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்த பிளஸ்-2 மாணவர் நிசாந்த், ஜெரிஸ், ஜெயசூர்யா 10-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் நஸ்ரின், நசீமா பாத்திமா, பவதாரணி ஆகியோருக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.44 ஆயிரத்தை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.
விழாவில் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜாஹிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அலமேலு நன்றி கூறினார். இதற்கான ஒழுங்கிணைப்பு பணிகளை ஆசிரியர் மணிவண்ணன், ஜமாத் செயலாளர் முகம்மது ரபீக் ஆகியோர் செய்தனர்.