உள்ளூர் செய்திகள்

கதவு உடைக்கப்பட்டு ரத்தக்கறையுடன் காணப்பட்ட தெய்வ ராணியின் வீடு.

இளம்பெண்ணை கடத்த முயற்சி; தாய்-மகளுக்கு கத்திக்குத்து

Published On 2022-10-07 07:54 GMT   |   Update On 2022-10-07 07:54 GMT
  • ஏர்வாடியில் இளம்பெண்ணை கடத்த முயற்சி; தாய்-மகளுக்கு கத்திக்குத்து விழுந்தது.
  • தப்பியோடிய கார்த்திக், அஜித் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியை சேர்ந்த சடைமுனியன் வலசை கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவரது மகள் கோகிலாவும் (21), சேதுக்கரையை சேர்ந்த பழனி மகன் கார்த்திக்கும் (27) காதலித்தனர். இந்த காதலுக்கு கோகிலாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். கார்த்திக்கின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கோகிலாவும் கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

ஆத்திரமடைந்த கார்த்திக் நண்பர் சேதுக்கரை நாகவேல் மகன் அஜித்தை அழைத்துக் கொண்டு சேதுக்கரையை சேர்ந்த சர்வேஸ்வரன் (25) என்பவரது ஆட்டோவில் கோகிலாவின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்தார்.

வீட்டின் பின்பக்கம் கதவை உடைத்து உள்ளே புகுந்த கார்த்திக், அஜித் ஆகியோர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த கோகிலாவை கடத்திச் செல்ல முயன்றனர். கோகிலா கூச்சலிட்டதை தொடர்ந்து தாயார் தெய்வ ராணி மகளை காப்பாற்ற முயன்றார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக் இருவரையும் குத்திவிட்டு தப்பி விட்டார்.

தெய்வ ராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் சர்வேசுவரனை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகிலாவையும், தெய்வ ராணியையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் தெய்வராணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆட்டோ டிரைவர் சர்வேஸ்வரனிடம் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய கார்த்திக், அஜித் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News