56 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- 56 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மீறி பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவோர் மீது அபராதம் விதிக்கப்படும்
கீழக்கரை
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் வர்த்தக நிறுவனங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் 56 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1400 அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, மேற்பார்வையாளர்கள் சக்தி, முருகன், பாலா, காளிதாஸ், திலக் மற்றும் பணியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
கீழக்கரை நகராட்சி தலைவர் சஹனாஸ் ஆபிதா, கவுன்சிலர்கள் நஸ்ருதீன், மீரான் அலி ஆகியோர் முன்னிலையில் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் கூறுகையில், கீழக்கரை பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. கடைகளில் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்ககூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவு அலுவலர்கள் தினமும் சோதனை செய்வார்கள். மீறி பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.
கடைகளில் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்கினால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம், தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.