புதுப்பாளையம் குளத்தில் மீன்கள் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
- ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது.
- குளத்தில் மீன் வளர்க்க ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும்.
குடிமங்கலம் :
குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் கிராமத்தில் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கிராம குளம் அமைந்துள்ளது.பருவமழை மற்றும் பி.ஏ.பி., பாசன உபரி நீரால் நிரம்பும் இக்குளம் சுற்றுப்பகுதி விளைநிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது.
மேலும் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களின் குடிநீர் போர்வெல்லும் குளத்தை நீராதாரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குளத்தில்ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தில், ஒரே நாளில்ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது.இக்குளத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகளும் தண்ணீர் அருந்தும். கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பதால் மக்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.மீன்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும். தண்ணீரில் மருந்து கலத்தல் உள்ளிட்ட சம்பவம் நடந்திருந்தால் தொடர்புடையவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முக்கிய நீராதாரமான குளத்தில் மீன் வளர்க்க ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராம மக்கள் புகார் அடிப்படையில், ஈரோடு மண்டல மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள், மீன்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய புதுப்பாளையம் குளத்தில் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர்.முக்கிய நீராதாரமான குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து கிடந்தது அப்பகுதியில், பரபரப்பையும் மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.