புழல் ஜெயிலில் போலீசார் அதிரடி சோதனை
- புழல் ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவது கஞ்சா பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
- கைதிகள் உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடந்தது.
செங்குன்றம்:
புழல் விசாரணை ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும் தண்டனை ஜெயிலில் 800-க்கும் மேற்பட்ட கைதிகளும் மகளிர் ஜெயிலில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக புழல் ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவது கஞ்சா பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இதனை தடுக்கும் முறையில் இன்று அதிகாலை 6 மணிக்கு கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் தலைமையில் புழல் ஜெயில் டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ், புழல் போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கைதிகள் உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடந்தது. இந்த சோதனையில் செல்போன் கஞ்சா எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை தொடரும் என துணை கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்தார்.