உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் .




நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் இயங்க அனுமதிக்க மனு

Published On 2022-06-13 09:25 GMT   |   Update On 2022-06-13 09:25 GMT
  • குவாரிகளை இயங்க அனுமதிக்கக்கோரி தொழிலாளர் மனு அளித்தனர்.
  • கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனு அளித்தனர்.

தமிழ்புலிகள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் கலைக்கண்ணன், முத்துவளவன் மற்றும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி அளித்த மனுவில், பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சேதுபதி என்ற வாலிபர் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கருவந்தாவில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்றபோது 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

மானூர் தாலுகா வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்தை சேர்ந்த பெண்கள் திரளாக வந்து அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 250 ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட அட்டைதாரர்கள் உள்ளனர்.

நாங்கள் தினமும் 5 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுதான் பணி செய்ய வேண்டி உள்ளது. எனவே எங்கள் ஊருக்கு அருகிலேயே பணியை பிரித்து வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில், நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சடையப்பன், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், கல்குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே குவாரிகளை விரைவில் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

Similar News