சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம்
- கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரிய விடுகிறார்கள்.
- காவல்துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்டுக்கோட்டை நகர பகுதியில் கால்நடை வளர்க்கும் சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை நகரின் பிரதான சாலைகளில் சுற்றித்திரிய விடுகிறார்கள்.
இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.
மேலும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
ஏற்கனவே இருமுறை நகராட்சி மூலம் நகரில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிலர் தொடர்ந்து கால்நடைகளை தெருவில் சுற்றித்திரிய விடுகிறார்கள்.
கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய விடுவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் அபராத கட்டணம், பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, காவல்துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.