உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் மனு அளிக்க வந்த உறுப்பினர்கள்.

ஊராட்சி துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு

Published On 2022-07-19 03:44 GMT   |   Update On 2022-07-19 03:44 GMT
  • ஊராட்சி துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.
  • உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அழகுமலை. துணைத் தலைவராக இருப்பவர் தெய்வலட்சுமி. இந்நிலையில், மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்களில், கடந்த மாதம் 27-ஆம் தேதி, 6 உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.

அந்த மனுவில், துணைத் தலைவராக இருக்கும் தெய்வலட்சுமி. அலுவலகத்திற்கு வருவது இல்லை. அலுவலக பணிகளை கவனிப்பதில்லை. வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை. அனைத்து பணிகளிலும் அவரது கணவர் முனியாண்டி தலையீடு செய்கிறார்.

பாளையங்கோட்டையில் ஊராட்சி துணைத்தலைவர் பதவியில் ஆள் மாறாட்டம் நடைபெற்று வருகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வார்டு உறுப்பினர்கள் காயத்ரி, சீனியம்மாள், முனிசெல்வம், அழகுமலை, கலைராணி அனுசியா ஆகிய 6 உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மற்றும் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தனர்.

அதன்படி துணைத்தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான, உறுப்பினர்களின் கருத்து கேட்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், துணைத்தலைவர் தெய்வலட்சுமி உட்பட 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் மீது புகார் கொடுத்த, வார்டு உறுப்பினர்கள் 6 பேரும், துணைத்தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். வார்டு உறுப்பினர்கள் 6 பேரின் கருத்துகளை கேட்டறிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான், உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறினார்.

Tags:    

Similar News