உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நல்லம்பள்ளி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல்

Published On 2022-06-23 10:45 GMT   |   Update On 2022-06-23 10:45 GMT
  • கடந்த 2 மாதங்களாக குடிநீர் இன்றி மக்கள் தவித்தனர்.
  • பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நல்லம்பள்ளி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாலஜங்கமனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூசாரி கொட்டாய் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி பொது மக்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் குழாய்கள் பல்வேறு இடங்களில் உடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றை ஊராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக கண்டுகொள்ளாததால் அப்பகுதி பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த இரண்டு மாதங்களாகவே குடிநீர் தேவைக்காக அருகில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சென்று குடிநீரை பிடித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது அனைத்து இடங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

குடிநீரால் சமையல் தாமதம் ஆவதால் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக குடி தண்ணீருக்கு ஏங்க வைக்கும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்றுகாலை அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டம் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி பிரதிநிதிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News