நடைமேடை- மழை நீர் வடிகால் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
- மேலூரில் நடைமேடை- மழை நீர் வடிகால் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மழை வெள்ளம் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குறுகிய மெயின் ரோடு தற்போது மிக அகலமாக காட்சி அளிக்கிறது. சமீப காலமாக கனமழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகவும் இடையூறாக இருந்து வந்தது.
இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மழை வெள்ளம் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்த நகராட்சி மண்டல இயக்குநர் சரவணன், மண்டல பொறியாளர் மனோகரன் ஆகியோர் பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் கால்வாய் முதல் செக்கடி பஜார் வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மழை நீர் வடிகால் அமைத்து அதன் மீது நடைமேடை அமைக்கவும், அதேபோல் யூனியன் அலுவலகம் வரை மழை நீர் வடிகால் அமைக்கவும் ஆய்வு செய்தனர்.
அப்போது மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், கமிஷனர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.