உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

Published On 2022-07-06 08:56 GMT   |   Update On 2022-07-06 08:56 GMT
  • நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  • பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது

கரூர்:

க.பரமத்தி அருகே உள்ள நெடுங்கூர், வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 64), விவசாயி. இவர் சம்பவத்தன்று மனைவி புஷ்பாவதி, மகன் சண்முகசுந்தரம் ஆகியோருடன் தனது தோட்டத்திற்கு சென்றார். மதியம் வேலை முடிந்தவுடன் புஷ்பாவதி, சண்முகசுந்தரம் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். பின்னர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, சண்முக சுந்தரம் வீட்டின் மேலே சென்று பார்த்தார். அப்போது ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதன் வழியாக கீழே இறங்கி வீட்டின் கதவை திறந்தார். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் செயின், 4 பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசில் தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News