புதிய அரசு கலை கல்லூரியில் 5 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை
- புதிய அரசு கலை கல்லூரியில் 5 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
- முதல்-அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து கானொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இதனையொட்டி அரவக்குறிச்சி புதிய அரசு மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்படும் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் அவர் கூறியதாவது: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தலா 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சேர்கை பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவரும், தேர்வு நெறியாளருமான சா.சுதா கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் என்றார்.
கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, கரூர் கோட்டாட்சியர் பா.ரூபினா, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான், துணைத்தலைவர் பஷீர்அகமது, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வள்ளியாத்தாள், அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகர், பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, துணைத்தலைவர் தங்கராஜ், வார்டு உறுப்பினர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.