ஒழுகினசேரியில் நடு வழியில் பழுதாகி நின்ற பஸ் கடும் போக்குவரத்து நெருக்கடி
- ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்கள் நெருக்கடியில் நின்றதால் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்
- பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தே அலுவலகங்களுக்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று நடுவழியில் பழுதாகி நின்றது.
இதனால் ஒழுகினசேரி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றன. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்கள் நெருக்கடியில் நின்றதால் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.
அதிகாலை நேரம் என்பதால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் தவிப்பிற்கு ஆளானார்கள். பஸ்ஸில் வந்த பெரும்பாலான பயணிகள் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தே அலுவலகங்களுக்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பிற்கு ஆளானார்கள்.
போக்குவரத்து போலீசார் சம்பவத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பழுதான பஸ் அங்கிருந்து மாற்றப்பட்டது. இதன் பிறகு போக்குவரத்தும் சீரானது.