உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைப்பு

Published On 2023-03-07 07:08 GMT   |   Update On 2023-03-07 07:42 GMT
  • சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்
  • படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு ஒரு மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்ததையொட்டி 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பொதிகை படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பொதிகை படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பொதிகை படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்தபிறகு பொதிகை படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கோடைவிடுமுறை சீசனையொட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும்.

Tags:    

Similar News