இரணியல் அருகே சொகுசு கார் மின்கம்பத்தில் மோதி விபத்து
- உடனே மின் தடை ஏற்பட்டது
- பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் மின் கம்பத்தை சீரமைத்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமாரி மாவட்டம் நித்திரவிளை பகுதியிலிருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.
கார் கண்டன்விளை மொட்டவிளையை கடந்து பேயன்குழி அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாடு இழந்து நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதி ஒரு வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது.
அப்போது அருகில் இருந்த ஒரு கடையின் முன்பக்கம் சேதமடைந்தது.கார் மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. உடனே மின் தடை ஏற்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தகவலறிந்த பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். பேயன்குழியில் சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.