கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான 10 பேர் மீது வழக்கு
- 4 துணை போலீஸ் சரகங்களுக் குட்பட்ட போலீஸ் நிலையங்களில் இது தொடர்பான வழக்குகள் பதிவு
- தலை மறைவாக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் போலீசார்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலை மறைவாக உள்ளவர்கள் மீது, கோர்ட்டு உத்தரவுபடி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் ஆகிய 4 துணை போலீஸ் சரகங்களுக் குட்பட்ட போலீஸ் நிலையங்களில் இது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழித்துறை, நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபுரம் ஆகிய கோர்ட்டுகளில் இருந்து அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் அந்தந்த போலீஸ் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தலைமறைவானவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவர்களை உடனடியாக கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் போலீசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதன் பேரில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலை மறைவாக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர ஏற்கனவே குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏராளமான வழக்குகள் உள்ளவர்களிடம் பிரிவு 110 ன் கீழ் நன்னடத்தை சான்றிதழும் எழுதி வாங்கப்படுகிறது. அதன் பேரில் நேற்று ஒரே நாளில் 13 பேர் மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.