உள்ளூர் செய்திகள்

அஜய் மாடசாமி.

விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் சிக்கினார்- போலீசாரால் தேடப்பட்டவர் 2 கிலோ கஞ்சாவுடன் கைது

Published On 2023-07-07 08:50 GMT   |   Update On 2023-07-07 08:50 GMT
  • அஜய் மாடசாமி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
  • கைதான அஜய் மாடசாமி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்தி குளம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற் பார்வையில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வீரசோலை தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரெட்ரிக்ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் விளாத்திகுளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கஞ்சா பறிமுதல்

அப்போது விளாத்திகுளம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் தூத்துக்குடி ஆரோக்கிய புரம், பாலதண்டாயுத நகரை சேர்ந்த அஜய் மாடசாமி என்ற மாடசாமி (வயது 41) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் மாடசாமி கடந்த ஆண்டு சூரங்குடி போலீஸ் நிலைய எல்லை பகுதியில் 460 கிலோ கஞ்சா மற்றும் 240 லிட்டர் மண்எண்ணை ஆகிய வற்றை 2 சரக்கு வாகனங் களில் கடத்தி வந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இதுவரை தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், வடபாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 9 வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News