உள்ளூர் செய்திகள்

கருணாநிதி உருவம் பொறித்த கலைத்தட்டை மேயர் சண்.ராமநாதன் காண்பித்தார்.

தஞ்சை பூம்புகாரில் கைவினை பொருட்கள் சிறப்பு கண்காட்சி, விற்பனை தொடக்கம்

Published On 2023-08-06 10:16 GMT   |   Update On 2023-08-06 10:16 GMT
  • பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை மேயர் பார்வையிட்டார்.
  • ரூ.75 முதல் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன.

தஞ்சாவூர்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார் .

தொடர்ந்து அவர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டார். கலைத்தட்டுக்களில் நுணுக்கமான முறையில் கருணாநிதி உருவம் பதிக்கப்பட்டதை பார்வையிட்டார். இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் கலைத்தட்டுக்கள், சுவாமி மலையில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட கடவுளின் சிலைகள், நாச்சியார் கோவில், மதுரை, வாகைக்குளத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகள், காகிதக்கூழ் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நவரத்தின கற்கள், கருங்காலி மாலைகள், ஸ்படிக மாலைகள், சந்தற மாலைகள், வாசனை திரவியங்கள், வெள்ளை மரம் , செம்மர கூலினால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், காட்டன் புடவைகள் உள்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியில் ரூ. 75 முதல் ரூ. 2,00,000 வரை மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன. வருகிற 19ஆம் தேதி வரை இந்த சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News