வரத்து பாதியாக குறைந்தது- பீன்ஸ் கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பீன்ஸ் மற்றும் காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்தது.
- பீன்ஸ், கேரட், அவரைக்காய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
போரூர்:
கோயம்பேடு சந்தைக்கு தினசரி சுமார் 90 டன் பீன்ஸ் மற்றும் 100 டன் கேரட் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ், கேரட் ஆகியவற்றின் செடிகள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.
இதன் காரணமாகவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக கேரட், பீன்ஸ் மற்றும் காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்தது.
இன்று சந்தைக்கு 40 டன் பீன்ஸ், 50 டன் ஊட்டி கேரட் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பீன்ஸ் கிலோ ரூ.100-க்கும், கேரட் ரூ.70-க்கும், அவரைக்காய் ரூ.55-க்கும் விற்கப்படுகிறது.
மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120-வரையும், கேரட் ரூ.90 வரையும் விற்பனை ஆகிறது.
பீன்ஸ், கேரட், அவரைக்காய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறும்போது, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பீன்ஸ், கேரட் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்கள் இருக்கும் என்றார்.