பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தேனி கலெக்டர் உத்தரவு
- இ-சேவை மையம், நில அளவைபிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி :
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம், ஆதார் மையம் மற்றும் அரசு பொது இ-சேவை மையம், நில அளவைபிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாதாந்திர உதவி–த்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்,
அதற்கான பதிவேடுகள் குறித்தும், அரசு பொது இ-சேவை மையத்தில், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும், நில அளவை பிரிவில் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு வேண்டி கடந்த மாதம் மற்றும் நடப்பு மாதம் இணையதளத்தில் வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, நிலுவை யிலுள்ள மனுக்களின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அரசின் பயன்களை விரைந்து வழங்கிடவும், பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடியாக சான்றிதழ்கள் வழங்கிடவும், பட்டா தொடர்பாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.