கோவையில் பெயிண்டரை அடித்து- உதைத்த நண்பர் கைது
- வினீஷ் மீது ராமநாதபுரம் போலீசில் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினீசை கைது செய்தனர்.
கோவை:
கோவை புலியகுளம் வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது41). பெயிண்டர். திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது புலியகுளத்தை சேர்ந்த வினீஷ்(30) மற்றும் ரூபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நண்பர்களாக பழகி வந்தனர். வினீஷ் மீது ராமநாதபுரம் போலீசில் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று வினீஷ் வழக்கு விசாரணைக்காக கோவை கோர்ட்டுக்கு சென்றார்.
உடன் ராஜாவை அழைத்து சென்றார். பின்னர் திரும்பி வரும்போது ராஜாவுக்கும், வினீசுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினீஷ் தகாத வார்த்தைகளால் திட்டி ராஜாவை சரமாரியாக அடித்து உதைத்து மிரட்டி சென்றார்.
தாக்குதலில் தலை உள்ளிட்ட இடங்களில் ராஜாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் தாக்குதல், மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினீசை கைது செய்தனர்.