வசவப்பபுரத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்
- முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
- 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்துங்கநல்லூர்:
கொரோனா தொற்று தற்போது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு இலவச சித்த மருத்துவ முகாம்கள், கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவப் பிரிவு மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆய்வு மையம் பாளையங்கோட்டை கிளை இணைந்து வசவப்பபுரம் கிராமத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவர்கள் செல்வகுமார், அரிகர மகாதேவன் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், அமுக்கரா மாத்திரை ஆகியன பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் வெங்கடேசன் பணியாளர்கள், இசக்கியப்பன், வேம்பன், மேரி ஆகியோர் செய்து இருந்தனர்.