கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு, தர நிர்ணய துறை சார்பில் விழிப்புணர்வு
- கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு, தர நிர்ணய துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
- இதில் பாரம்பரிய உணவு தயாரிக்கும் உபகரணங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள்களின் தரங்களை விளக்கும் வண்ணம் இந்திய உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணயத்துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், டி.எஸ்.பி.சீனிவாசன், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய மண்டல இயக்குனர் ஷானு ஜேக்கப், மாநிலத் துணை இயக்குனர் கண்ணன், நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், கொடைக்கானல் ரோட்டரி கிளப் தலைவர் கார்த்திக், இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் பாஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரையண்ட் பூங்காவில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்டாட்சியர் முருகேசன், ஆணையாளர் நாராயணன், நகர்மன்ற தலைவர் செல்லத்துரை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பிரையண்ட் பூங்காவில் இருந்து ஏரிச்சாலை வழியாக 7 ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில்விழிப்புணர்வு ஊர்வலம் நிறைவு பெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கில் இந்திய, தமிழக பாரம்பரிய உணவு வகைகள், தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கும் பழங்காலபாத்திர பண்டங்கள் காட்சிப்படுத்த ப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் பாதுகாப்பான உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவுப் பொருட்களை உண்பது அதன் தரங்களை அறிவது போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.