உள்ளூர் செய்திகள்

தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம்

Published On 2022-06-29 09:50 GMT   |   Update On 2022-06-29 09:50 GMT
  • சோனி வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
  • வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் 2 காதல் ஜோடிகளும் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் புழுதிக்கரை ஊராட்சி சவுளூரை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அய்யப்பன் (24).இவர் கேரளாவில் கனரக வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

அய்யப்பனின் உறவுக்கார பெண் தீர்த்தம்மாள் (எ) சோனி (20). சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. உறவினர்கள் என்றாலும் சோனி வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 27-ந்தேதி அன்று மூக்கனூர் பெருமாள் கோவிலில் அய்யப்பனும், சோனியும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் சோனியா காணவில்லை என்றும், அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் சோனியின் தந்தை வேலு கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். கடத்தல் வழக்கில் போலீசில் சிக்கினால் அய்யப்பன் தாக்கப்படுவார் என்று அவருக்கு தகவல் கிடைத்ததாம்.

இதனால் பயந்துபோன அய்யப்பன் தனது புதுமனைவி சோனியுடன் இன்று தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து இரு தரப்பு பெற்றோர்களையும் போலீசார் வரவழைத்து சமரசம் பேசி அனுப்பினர். இதேபோல வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் 2 காதல் ஜோடிகளும் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Similar News