தளவாய்அள்ளி சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- கடந்த 25-ம் தேதி கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் அருகே உள்ள தளவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு புதிய விக்ரகம் அமைக்கப்பட்டது.
மாரியம்மனுக்கான குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக விழா கடந்த 25-ம் தேதி கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ பட்டணத்து மாரியம்மன் கோவிலில் இருந்து தலைவாய்அள்ளி வரை பால்குடம் எடுத்தல் வாஸ்து சாந்தி பூஜை, மற்றும் சங்கல்பம் பூஜை, கணபதி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
யாக சாலை பூஜை நடைபெற்று ஸ்ரீ சக்தி மாரியம்மன், விநாயகர், காமாட்சி அம்மன், நவகிரகத்தின் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடி சந்தனமும், கும்ப அலங்காரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா குழுவின் சார்பாக அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவின் போது தலைவாய்அள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசித்து சென்றனர்.
கும்பாபிஷேக விழா மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.