ரேசன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
- சேலம் மாவட்டத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் சட்டவிரோதமாக கடத்தப்படும் ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் 1,156 முழுநேரம் மற்றும் 445 பகுதி நேரம் என மொத்தம் 1,601 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் சட்டவிரோதமாக கடத்தப்படும் ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டு, குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எனவே அரிசி விநியோகத்தில் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது அரிசி கடத்துபவர்களுக்கு துணைபோனாலோ அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், இன்றியமையா பண்டங்கள் சட்டம்1955-ன்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அரிசியினை நியாய விலைக் கடையிலிருந்து பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்தால், அவர்களின் குடும்ப அட்டையினை ரத்து செய்திட பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.