உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-09-27 00:30 GMT   |   Update On 2022-09-27 00:30 GMT
  • தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அதிகம்.
  • வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை 4 விழுக்காடு மட்டுமே.

சென்னையில் நடைபெற்ற தனியார்  செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் தெற்கு வழிகாட்டுகிறது என்று நாங்கள் சொல்வதை, மொழிப்பற்றால் - இன உணர்வால் சொல்வதாக யாரும் நினைக்கக் கூடாது. வரலாறு சொல்லும் பாடம் என்பதும் அதுதான். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட சமூகமாக கீழடியிலும் - ஆதிச்சநல்லூரிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இந்த வரலாறு சொல்லத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பதே தெற்கில் இருந்துதான் முதன்முதலில் தொடங்கியது. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாகி அடிமைப்படுத்துதல் உருவானபோதே அதற்கு எதிரான விடுதலை முழக்கமிட்ட மண், இந்தத் தென்னக மண். இந்தியர்களுக்கு ஓரளவு நிர்வாக சுதந்திரம் தரலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, இரட்டையாட்சி முறை 1920-ஆம் ஆண்டு உருவானது.

அப்போது அந்த இரட்டையாட்சி முறையை முறைப்படி நடத்தி மக்களாட்சியின் மாண்பைக் காத்த அரசு அன்றைய சென்னை மாகாண நீதிக்கட்சியினுடைய அரசு. அன்றைக்கு சென்னை ராஜதானி சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் போல இருக்கும் என்று சொல்லி அயல்நாடுகளில் இருந்து வரக்கூடிய பார்வையாளர்கள் நம்முடைய சட்டமன்றத்தை வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வகுப்பின் அளவுக்கு தகுந்த இடஒதுக்கீடு எனும் சமூகநீதி உரிமையை வழங்கியது தமிழ்நாடு. பெண்களுக்கு வாக்குரிமை என்பது 1921-ஆம் ஆண்டே சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என முதன்முதலாக சட்டம் போட்டது தமிழ்நாடு.

இந்தியாவின் மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முதலில் சொன்னது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை நிலைநாட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யக் காரணமானது தமிழ்நாடு.

சென்னையில் நடந்த போராட்டங்கள் காரணமாகத்தான் இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்கள். இதன் மூலமாகத்தான் இந்தியாவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இருந்த தடைகள் மொத்தமாக நீக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் ஆணையத்தால் வழங்கப்பட வேண்டிய 27 விழுக்காடு இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து போராடியது திராவிட இயக்கம். வி.பி.சிங்கை பிரதமராக ஆதரித்து, அதனைச் செயல்படுத்திக் கொடுத்ததன் மூலமாகத்தான், இந்தியாவில் இருக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களும் தடையின்றி நிர்வாக அதிகாரம் பெற வழிவகை செய்தது தமிழ்நாடு.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக் குறியீடுகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. உயர்கல்வியில் சேர்வோர் விகிதம் 51.8 விழுக்காடாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை என்பது 6.8 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் 3.63 விழுக்காடுதான். இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அதிகம். பணவீக்கம் என்பது இந்திய அளவில் 6.71 விழுக்காடு. ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் என்பது 4.78 விழுக்காடுதான்.

பட்டினிச் சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை 4 விழுக்காடு மட்டுமே. இவை அனைத்தும் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி, இந்த அடித்தளத்தில்தான் திராவிட மாடல் ஆட்சியானது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News