சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் பாலாலயம்- ராஜகோபுரம், விமானங்கள் திருப்பணி தொடக்கம்
- சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலயப் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருப்பணி வேலைகளை விரைவில் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஆன்மீக அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலயப் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.யாகசாலை அமைக்கப்பட்டு பூர்ணாஹூதி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரஷாபந்தம், கும்பஅலங்காரம், ராஜகோபுரம், விமானங்கள், கலாகர்ச்சணம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலையில் பூஜைகள் மீண்டும் தொடங்கியது.
யாக சாலையில் மரத்தி–லான ராஜகோபுரம் மாதிரி வடிவத்திற்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்ப நீர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பாலாலய பூஜைகள் அனைத்தும் அதிகாலை 5.40 மணிக்குள் முடிவுற்றது. இதில் ராஜா எம்.எல்.ஏ., கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.