பல்லடம் அருகே மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
- ரங்கசமுத்திரம் என்ற பகுதியில் உறவினர் வீட்டில் டியூசன் பயின்று வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் என்பவரது மனைவி பூங்கொடி(42) இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், குழந்தைகள் இருவரும் பல்லடம் அருகே உள்ள சூலூர் கேந்திர வித்யா பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே குழந்தைகள் ஞாயிற்றுகிழமைகளில், பல்லடம் அருகே செட்டிபாளையம் ரோடு ரங்கசமுத்திரம் என்ற பகுதியில் உறவினர் வீட்டில் டியூசன் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று வழக்கம் போல குழந்தைகளை பார்த்துவிட்டு, அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டிற்கு பூங்கொடி மோட்டர் சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பூங்கொடி அணிந்திருந்த, 6 1/2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இது குறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.