மேலப்பாளையம் தெருக்களில் சுற்றித்திரிந்த 40 நாய்கள் பிடிபட்டன-மாநகராட்சி நடவடிக்கை
- நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் பல்வேறு தெருக்களில் நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன.
- வண்ணார்பேட்டை மற்றும் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளிலும் திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் பல்வேறு தெருக்களில் நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன.
நெல்லை மண்டலத்தில் டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மேலப்பாளையம் மண்டலத்தில் டவுன்ரோடு, ஆசாத்ரோடு, ஆண்டவர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் பகல், இரவு நேரங்களில் நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன.
இதேபோல் வண்ணார்பேட்டை மற்றும் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளிலும் திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி செல்வதால் அவர்கள் அச்சத்தில் விபத்தில் சிக்கி வருகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது.
எனவே மாநகர பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் கமிஷனர் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டது.
மண்டல உதவி கமிஷனர் அய்யப்பன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பல்வேறு தெருக்களில் சுற்றிய 40 நாய்கள் பிடித்து செல்லப்பட்டன.
இதேபோல் நெல்லை உள்ளிட்ட பிற மண்டலத்தில் திரியும் நாய்களையும் பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.