கிராமிய விழிப்புணர்வு குழு அமைப்பு
- 24 மணிநேரமும் செயல்படுகிறது
- சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தல்
ஜோலார்பேட்டை :
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் நிலைய சார்பில் கிராமிய விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டது.
அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம், கேத்தாண்டப்பட்டி, அக்ரா வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிராமிய விழிப்புணர்வு குழு ஒவ்வொரு கிராமத்திலும் 24 மணி நேரம் அப்பகுதியில் இருக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தங்களது கிராமத்திற்கு வரும் அந்நிய சந்தேக நபர்களை பற்றியும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்தும் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் தகவல் சொல்பவர் குறித்த விவரம் ரகசியம் காக்கப்படும் மேலும் அதற்கான வெகுமதி வழங்கப்படும்.
மேலும் கிராமத்தில் முன்பு சாராயம் காய்ச்சுதல், அதற்கு துணை போகுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் திருந்தி வாழ முன்வந்தால் அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேரிடையாக அழைத்து சென்று அவர்களுக்கு வேறு தொழில் செய்ய அதற்கான நிதியுதவி அரசு சார்பில் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.