உள்ளூர் செய்திகள்
மரணம்

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2022-06-02 06:35 GMT   |   Update On 2022-06-02 06:35 GMT
கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பூபதியின் அண்ணன் தருணும் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பலியாகி இருந்தார். இப்போது அதே போல் பூபதியும் இறந்து விட்டார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பூபதி (வயது14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பூபதி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

அப்போது அதே பகுதியில் செல்லும் கிருஷ்ணா கால்வாய் அருகே பூபதியின் செருப்பு மட்டும் கிடந்தது. இதனால் அவர் கிருஷ்ணா கால்வாயில் இறங்கிய போது அடித்து சென்று இருப்பது தெரிந்தது.

தற்போது கிருஷ்ணா நீர் அதிக அளவு வந்து கொண்டு இருப்பதால் பூபதியை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய பூபதியை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். ஆனால் அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே பூண்டி ஏரி அருகே கிருஷ்ணா தண்ணீர் சேரும் இடத்தில் இன்று காலை பூபதி பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 8 ஆண்டுக்கு முன்பு இதே போல் பூபதியின் அண்ணன் தருணும் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பலியாகி இருந்தார். இப்போது அதே போல் பூபதியும் இறந்து விட்டார். இரண்டு மகன்களையும் கிருஷ்ணா கால்வாயில் பறிகொடுத்த ரமேஷ் மிகுந்த சோகத்தில் உள்ளார்.
Tags:    

Similar News