உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் 10-ம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி?
கடைசி தேர்வை எழுதி விட்டு அவரது நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பத்தாம் வகுப்பு கடைசி தேர்வை எழுதி விட்டு அவரது நண்பர்கள் மவுரி, தமிழ்ச்செல்வன் மற்றும் சிலருடன் மாமல்லபுரம் சென்று கடலில் குளித்தார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி கடலின் உள்ளே பன்னீர்செல்வம் இழுத்து செல்லப்பட்டார்.அருகில் நின்று குளித்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் மாயமான பன்னீர்செல்வத்தை கடலில் தேடிவருகின்றனர். அவர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.