உள்ளூர் செய்திகள்
மதுரை பெருங்குடியில் கல்லூரி மாணவர்கள் மோதல் 2 பேர் கைது
மதுரை
மதுரை பெருங்குடியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வில்லாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் சக்தி (வயது 20) என்பவர் படித்து வருகிறார்.
இவருக்கும் அந்த கல்லூரியில் படிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் சக்தி நேற்று மதியம் சின்ன உடைப்பு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.
இது தொடர்பாக சக்தி அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சக்தியை தாக்கியதாக எம்.எம்.சி காலனி, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ஆகிய பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர தப்பி ஓடிய ரமேஷ், மணி, நமச்சி, மகா ஆகிய 4 பேரை அவனியாபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.