மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நள்ளிரவில் காரை வழிமறித்து தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை
சிறுமுகை:
கோவை மாவட்டம் மேட்டுப்பா ளையத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையம்-குன்னூர், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி என 2 மலைப்பாதைகள் செல்கின்றன.
இந்த மலைப்பாதைகள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ், கார், வேன் உள்ளிட்டவற்றில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிகாலை நேரங்கள் மற்றும் நள்ளிரவு நேரங்களில் யானைகள் சுற்றி திரிந்து வருவதுடன், அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
நேற்று நள்ளிரவு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த கார் குஞ்சப்பனை அருகே சென்றபோது சாலையோரத்தில் காட்டு யானை ஒன்று நிற்பதை காரில் இருந்தவர் பார்த்தார்.
இதனால் வாகனத்தை மெல்ல இயக்கினார். அப்போது திடீரென ஒற்றை காட்டு யானை காரை நோக்கி வேகமா ஓடி வந்து, காரை தாக்க முயன்றது.
இருப்பினும் சுதாரித்து கொண்ட காரில் இருந்தவர், வேகமாக காரை பின்னோக்கி இயக்கி யானையிடம் இருந்து தப்பினார்.
சிறிது நேரம் அங்கு சுற்றி திரிந்த யானை பின்னர் வனத்திற்குள் சென்று விட்டது. தற்போது கோடை காலம் என்பதால் யானைகள் நடமாட்டம் சாலைகளில் அதிகரித்துள்ளது. எனவே சாலைகளில் பயணிப்போர் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.