உள்ளூர் செய்திகள்
சிறுவாணி அணையின் நீர் மட்டம் 870.40 மீட்டராக ஆக உயர்வு
இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
கோவை:
கோவை மாநகர மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்ததால், அணையின் நீர் மட்டமானது 874 மீட்டர் வரை உயர்ந்தது.
சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு, பாது காப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்துவிட்டது. இதன் காரணமாக, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சிறுவாணி அணை முழுக்கொள்ளளவை எட்டவில்லை. அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரியத் தொடங்கியது.
இந்நிலையில், தற்போது சிறு வாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைக்குச் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த வாரத்தில் 869.80 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்றய நிலவரப்படி 870.40 மீட்டராக ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு, ஜூன் மாதத்துக்கு முன்பே கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 2 வாரமாக இடை வெளி விட்டு மழை பெய்கிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஜூலை, ஆகஸ்டில் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புகள் அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.